Thursday, January 9, 2014

ஆர்கலியாழ்

ரொம்ப நாளாகவே இந்த பக்கத்தை கொஞ்சம் தூசி தட்டனும்னு நினைச்சிட்டு இருந்தேன். இறுதியில் இன்று தான் இதற்கும்  நேரம் வந்திருக்கு போல. இந்த பதிவு ஒரு பெயர் சூட்டு நிகழ்வு அல்லது பெயர் அறிவிப்பு நிகழ்வு என்றுகூட வைத்துக் கொள்ளலாம்.

அதற்கு முன்னால் நிறைய பேர் என்னிடம் கேட்டது என் வலைதளத்திற்கான பெயர்க் காரணம். சொல்லி வைத்தது போல் எல்லோருமே என்னிடம் இது சிந்தனை சாரல் என்று தானே வந்திருக்க வேண்டும் என்று கேட்டார்கள். வெறும் சிரிப்புடன் நகர்ந்திருக்கிறேன் அப்பொழுது எல்லாம். இன்று அதற்கும் காரணம் சொல்கிறேன்.
வெட்டியாக வீட்டில் சும்மா இருந்த நாட்களில் பொழுது போகாமல் வலைப்பக்கங்கள் படிக்க தொடங்கி கொஞ்சம் அதில் ஆர்வமும் வந்தது. காலப்போக்கில் நாமும், நமக்கு என்று ஒரு வலைப்பக்கம்  என்று தான் ஆரம்பிக்க முயற்சி செய்தேன். எல்லாம் ஓகே என்றதும் என்ன பெயர் வைக்க வலைப்பக்கத்திற்கு, உண்மையாகவே ஒன்றும் தோன்றவில்லை. யோசித்து யோசித்து அயர்ந்த நேரம் தான் ஞாபகம் வந்தது இந்த பெயர். இந்த பெயர் எங்கள்  மகளுக்காக நாங்கள் யோசித்து வைத்த பெயர். ஆனால் நினைத்தது போல் நடக்கவில்லை, எப்பவும் நினைத்தது எல்லாம் நடந்தும் விடுவதில்லை . நீ மகள் வேணும் என்கிறாயா எடுத்துக்கோ மகனை என்று மொத்தத்தையும் மாற்றியது. 

எந்த குழந்தை என்றாலும் ஒன்றே போதும் என்ற மன நிலையில் இருவரும் இருந்ததால், என் மகன் சமர் வந்தது முதல் இந்த பெயர் சுத்தமாக மறந்தே போனது. இனிமேல் இந்த பெயர் நம் வாழ்வினில் இனி எப்போதும் இல்லை என்று இருந்த என்னை இல்லை நான் உன்னோடவே தான் அம்மா இருப்பேன் என்னை தூக்கி போடாதே, என்று மீண்டும் என் ஞாபகத்திற்கு வந்தாள் என் செல்ல மகள்  சிந்தனா. ஏன் அவள் பெயரிலே இந்த வலைதளத்தை ஆரம்பிக்க கூடாது என்றே அவளின் பெயரிலே இதை தொடங்கினேன். இந்த வலைத்தளம் "சிந்தனா சாரல்"  ஆக 2012இல் பிறந்தது.



ஆரம்பித்த வருடம் ஓரளவிற்கு சுறுசுறுப்பாக பதிவு போட்டேன். அதிகம் இல்லை என்றாலும் மாதம் ஒன்றாவது பதிவிட்டேன். 2013இல் சுத்தமாக என் நேரம் என்னிடமே இல்லை. 24 மணிநேரமும் பத்தாமல் வாழ்க்கை சக்கரத்தில் சுழன்று கொண்டே இருந்தேன். ஆனால் 2014இல் எப்படியேனும் இவளை மீண்டும் கவனிக்க எண்ணி தான் தூசி தட்டி ஆரம்பித்து இருக்கிறேன்.

ஆரம்பித்த பொழுது என்னவோ பெயர் சூட்டு நிகழ்வு, அறிவித்தல் என்று போட்டு இருந்ததே அது இது தானோ என்று நினைக்காதீர்கள் இப்பெயர் சூட்டல் எங்கள் கனவு இல்லத்திற்கு. வீட்டை வாங்கி ஒரு வருடம் கழித்து இறுதியில் ஒரு வழியாக இவளுக்கும்  தேடி கண்டு பிடித்துவிட்டேன் பெயரினை என் நேரம் எனக்கே இல்லாத பொழுதும்.


இயற்கையாகவே அழகான மலைகள்  சூழ்ந்த ஊரில் பிறந்து வளர்ந்ததாலோ என்னவோ மலைகள் மீது அளவு கடந்து பாசம் எப்பொழுதும். சென்னைக்கு வேலை நிமித்தமாக வரும் வரை என் பால்யம் முழுதும் அழகான மலைகள், சுத்தமான காற்று என இயற்கை சூழலில் வளர்ந்தேன். தடுக்கி விழுந்தால் கொடைக்கானல் தவிர வேறு எங்கும் மலை பிரதேசம் போனதில்லை. 2013இல் உதகை, மூணாறு சென்று வந்ததில் இருந்து இன்னும் மலைகள் மீது அன்பு கூடி விட்டது. அதிலும் மூணாறு இன்னும் என்னை அதன் மேல் அதி தீவிர மோகத்தை ஏற்படுத்திவிட்டது. இத்தனை வருடம் இவ்வளவு அருகினில் இருந்தும் இவளை தரிசிக்க முடியாமலே இருந்திருக்கேனே நான் என்று தான் எனக்கு தோன்றியது. எத்தனை அழகன இடம். எங்கும் பசுமை மட்டுமே!

என் நினைவில் என்னை விட்டு எப்பொழுதும் நீங்காமல் இருக்கும் மற்றுமொரு இடம் கடல்கள். கடல் மீது எப்பவும் தீரா காதல் உண்டு எனக்கு. சிறு வயது முதல் ஆச்சி வீட்டிற்கு செல்வது முடிவானதுமே என் கண் முன்னால் வருவது கடற்கரைகள். எப்போ போவோம் கடற்கரைக்கு என்றே மனம் அடித்துக் கொள்ளும். திருச்செந்தூர் சென்று வரும்போது குலசைக்கும் அழைத்து செல்வார்கள். ஆட்கள் அதிகம் இல்லாமல் ரொம்பவே அமைதியாக அழகாக இருக்கும் குலசை கடல். கடற்கரையில் இருந்தே தெரியும் அழகாக மனப்பாடு.  மனப்பாடுக்கும், மூணாறுக்கும் என்ன சம்பந்தம் என்னுடன் என்று தெரியாது ஆனால் இந்த இரண்டு இடத்திற்கும்  செல்லும் போது நான் என்னை மறந்தே ரசித்திருக்கிறேன்.  இந்த இடங்களில் லயித்து எனக்கான தனி உலகம் இது என்று அதனுடன் இருப்பேன்.


இது தான் காரணமா என்று தெரியவில்லை, வீட்டிற்கு பெயர் வைக்க வேண்டும் என்று தோன்றியதும் கடலும், மலைகளுமே எனக்கு ஞாபகம் வந்தது. எத்தனை யோசித்தாலும் இறுதியில் இந்த இரண்டு மட்டுமே என் முன் வந்து நின்று அழகாக சிரித்தது. இவர்கள் இரண்டு பேருடன் ஆன என் காதலே இந்த பெயரை எனக்கு தந்தது. ஆம், எங்கள் இல்லத்தின் பெயர் "ஆர்கலியாழ்".... கடலும், மலையும் எனக்கு சந்தோசத்தை தருவதை போல் இவை இரண்டும் (ஆர்கலி+யாழ்) சேர்ந்து என்னுள் எப்பவும் சந்தோசத்தை தரும் என்ற நம்பிக்கையில் நான்.



Monday, November 4, 2013

அலுவலகம்

எதை பற்றியும் 
கவலை இல்லாத காலம் 
கல்லூரி காலம்! 

வாழ்க்கை பயணத்தில் 
வாழ்வு பயத்தினை 
காட்டி செல்லும் காலம்
வேலைக்கான தேடல் படலம்!!

என் தேடலும் 
என் கண் முன்னே 
அப்பயத்தினை காட்டி
என் மீதான தன்னம்பிக்கையை 
ஆட்டி பார்த்த காலம்!

காலத்தின் முடிவில் 
என் முதல் வேலை !
என் முதல் வேலை
சந்தோசத்தின் உச்சம் !!

வேலையை பற்றியே 
மனம் சுற்றிய நாட்கள் 
பேருந்து ரயிலென மாறி மாறித்
தொடும் அலுவலகம்.
வார்த்தைகளின் கூட்டங்களாய் 
வேலை வலை விரிக்கும்.
கணினியின் கரங்களின் பிடி 
எப்போதும் அலை கழிக்கும்
வாரத்தின் கடைசிக்காய் ஏங்கும் நாட்கள்
திங்களின்  விடியலில் தொடங்கும் ஓட்டம்!

பணியின் கரங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவை
பணியின் நாட்கள் அற்புதமானவை
திசைக்கொன்றான பறவைகள்
தினம் கூடும் கூடு வேலையின் கூடு.
கூடு ஒன்றே பறவைகள் பலவிதம்!

தேடலில் கற்றவை அனைத்திலும் 
தோழன் தோழியருக்கும் பெரும் பங்குண்டு. 

ஆம்,
நம்மை செதுக்கிய சிற்பிகள் அல்லவா அவர்கள்.
நம்மை செதுக்கி கொண்டே 
இருப்பவர்களும் அவர்களே !!

ஒவ்வொருவரின் முகத்திலும் 
ஒவ்வொரு பரிமாணங்கள் 
ஒவ்வொருவரும் கற்று கொடுத்த பாடம் 
ஆயிரம் ஆயிரம்.
இன்னும் கற்றுக்கொண்டே 
தொடரும் பயணம் !

கால ஓட்டத்தில் கூடுகள் மாறும்.
புது புது பறவைகளுடன் 
சேர்ந்தே பயணிக்கும்.
பார்த்தவுடன் சிலரை பிடிக்கும், 
பழக பழகவே பலரை பிடிக்கும்.

ஏமாற்றங்களை கற்று கொண்டு, 
வாழ்க்கை பயணத்தில் 
அதை 
படிக்கட்டுகளாய் மாற்றி 
முன்னேறி கொண்டே 
இங்கு வரை வந்துவிட்டோம் 
இன்னும் பயணிப்போம். 

தேடல் மற்றும் 
தேடலுக்கான முயற்சிகள் 
மட்டும் முடிவதில்லை.......
தேடல்கள் தொடரட்டும் !!!!!

Tuesday, August 6, 2013

விழியனின் "மாகடிகாரம்" - நூல் அறிமுகம்

வாழ்க்கையில் சில பொருட்களை திரும்ப பார்க்கும் பொழுதோ, அதை பற்றி யோசிக்கும் பொழுதோ அவை நம்மை நம் வாழ்வின் சந்தோசத்துடன் கழித்த அந்த அரிய நிமிடங்களை திருப்பி தந்து சந்தோசப்பட‌ செய்யும். மீண்டும் அவற்றுடன் நம்மை பயணிக்க செய்யும். அது போல் தான் நேற்றைய என் இரவு இருந்தது. என் வாழ்வை என் பால்யத்திற்கு மீண்டும் அழைத்து சென்ற பெருமை, நான் இன்றும் நேசிக்கும் எனக்கு பிடித்த என் சுவர் கடிகாரம்.
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் இவன் எங்கள் குடும்பத்தின் ஒருவனாய் தான் இருந்தான். எத்தனை மணியோ அந்தனை தடவை மணி அடித்து, தூங்கும் பொழுதும் நான் உன்னுடன் இன்றும் இருக்கிறேன் என்று எப்பொழுதும் சொல்லி கொண்டே இருக்கும். இப்போ எதற்கு இந்த பீடிகை என்று நீங்கள் கேட்பது புரிகிறது. எனக்கு இந்த நினைவுகளை மீட்டு திருப்பி தந்தவர் விழியன். ஆம் அவரின் "மாகடிகாரம்" புத்தகம் தான்.

இதுவரை குழந்தை இலக்கியம் படித்ததில்லை. இதுவே முதல்முறை. இந்த புத்தகத்தில் என்னை கவர்ந்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். "மாகடிகாரம்" - என்னும் தாத்தாக்களின் தாத்தா கடிகாரம் பற்றிய புத்தகம் அது. இவை முழுக்க முழுக்க சிறுவர்களுக்கு என்று மட்டுமே சொல்ல முடியாது. என்னை போன்ற வளர்ந்தவர்களும் வாசித்து கற்று கொள்ள நிறையவே இருக்கிறது. 


சிறுவன் தீமனை சுற்றியே கதை சுழல்கிறது. தீமன் ஒரு வட்டதிற்குள் சிக்காமல் தன் எண்ணப்படி பயணிக்கிறான். அவனின் கற்றல், அவன் குடும்பம், அவன் தோழன், என்று ஒரு பரந்த‌ உலகில் இருக்கிறான். தன் பள்ளி படிப்பில் பெரிதும் வெற்றி பெறவில்லை என்றாலும் அவன் அதை கடந்து செல்கிறான், மிக அழகாக. குடும்பத்துடன் சுற்றுலா வந்த இடத்தில் தனக்கே உரித்தான அந்த தேடலின் பொழுது தான் மாகடிகரம் பற்றியும், அதன் இயக்கும் முறை பற்றியும், அவன் கற்று தெரிந்து கொள்கிறான். மாகடிகாரத்தால் இவ்வுலகம் செயல்படும் முறை என்று எல்லாம் தெரிந்து கொள்கிறான்.

சந்தர்ப்ப சூழ்நிலையில் அந்த‌ மாகடிகாரம் அவனின் முழு கவனிப்பில் வருகிறது. தனக்கே உரித்தான சுட்டித்தனத்தால் அவற்றை பயன்படுத்தி அதை பழுதடைய செய்கிறான். மாகடிகாரத்தை பாதுகாப்பவர்கள் இப்பழுதால் இவ்வுலகில் என்ன நடக்க போகிறதோ? என்று பயம் கொள்கிறார்கள். அவற்றில் இருந்து எப்படி இவ்வுலகை காப்பாற்றுகிறான் என்பதே இக்கதை. எப்படி காப்பற்றினான் என்பதை புத்தகத்தில் படித்து அறிந்து கொள்ளுங்கள். 

இப்புத்தகத்தில் எனக்கு பிடித்த இடம் நிறையவே. கதை ஓட்டத்துடன் ஆசிரியர் அறிவியலை மிக அழகாக உள்புகுத்தி அதை குழந்தைகளும் எளிதில் புரியும் படி எழுதி இருக்கிறார். குறிப்பாக விநாடி, நிமிடம் என்று பலவற்றை மிக எளிதாக சொல்லி இருக்கிறார். பொதுவாக நம் பள்ளிகளில் படிப்பிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்ற தனித்திறமைக்கு கொடுப்பதில்லை என்பதை சொன்னவிதம் பிடித்திருந்தது. 

இக்கதையில் வரும் தீமனின் தந்தை கதாபத்திரம் அருமையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இவரை போன்ற பெற்றோர்கள் கிடைக்கும் குழந்தைகள் வாழ்வினில் தங்களின் தேவை மற்றும் வாழ்வியலை நிர்ணயித்து பயணிப்பார்கள். எப்பிரச்சனைகளையும் சமாளிக்கும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். 


இக்கதையில் மாகடிகாரத்தை தேடி செல்லும் பயணம், அங்கு அவனுக்கு (தீமனுக்கு) கிடைத்த தோழமை, அவனின் யோசனைகள் என்று அனைத்தையும் ரசித்தேன். எல்லாமே ஒரே நேர் கோட்டியில் பயணித்தது. இப்புத்தகத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் புத்தகத்தில் வரைந்த ஓவியங்கள், பொருத்தமாகவும் சிறப்பாகவும் இருந்தது. எல்லாவற்றிற்கும் மேல் ஆசிரியரின் எழுத்து நடை அருமை. ரசித்து என்னையும் தீமனுடன் சேர்ந்தே பயணிக்க செய்தார்.

நீங்களும் புத்தகத்தை படித்து பாருங்கள்....... குழந்தைகளோடு குழந்தையாகி!




புத்தகம் : மாகடிகாரம் 
பதிப்பகம் : புக்ஸ் பார் சில்ரன் 
விலை : 30 ரூபாய்
பக்கங்கள் : 47

Saturday, August 3, 2013

சாரல்கள் - 3

உன்
எல்லா பயணத்திலும்
சேர்ந்தே பயணிக்கும் என்னை,
உன்
எல்லை இது என
தனித்து விட்டு செல்லும் உனக்காக,
உன்
அடுத்த பயணத்திற்கும்
தயாராகவே நான்...

- செருப்பு

எல்லா சிக்கல்களையும்
நீயே தீர்க்கிறாய்
என்ற கர்வம் உனக்கு!
உண்மையில்
உன் தீர்க்க படாத
சிக்கல்களுக்கு நானே தீர்வு!!

- சீப்பு

உன்னையும், என்னையும்
எந்த தொழில்நுட்பம் இணைத்தாலும்!
நினைக்கும் பொழுது
தோள் கொடுக்கவும், தோள் சாயவும்,
நீ என் அருகாமையில்
இருப்பது போல் வருமா!

- பிரிவு

வெற்றி தரும் மகிழ்ச்சியில்
தோல்வி தரும் துக்கத்தில்
பயணம் தரும் களைப்பில்
எல்லாவற்றிலும்
உன்னுடனே இருக்கும் என்னை
வேண்டாம் என்று அந்நியபடுத்துகிறாய்,
சிறு பிள்ளை போல்!
நான் இல்லாமல் எப்படி
இவ்வுலகில் தனியாய் நீ மட்டும்!

- நினைவுகள்

என்னை அழகாக்க
என்னை சிரிக்க வைக்க
என்னை உத்வேகப்படுத்த
என்னை சந்தோசப்படுத்த
நீ சொல்லும் பொய்களையெல்லாம்
நான் நம்பிக்கொண்டிருப்பதாக
நடித்துக்கொண்டிருக்கிறேன்
உனக்காக...

- பொய்கள்



எனக்கான எல்லையை, நீயே தீர்மானித்து
என்னை ஓட செய்கிறாய், அந்த எல்லையை நோக்கி!
எல்லையை தொடும்முன்
எனக்கான அடுத்த இலக்கையும் நீயே தீர்மானிக்கிறாய்!
மீண்டும், மீண்டும்!
புரிந்தும், புரியாமலும்!
நீ சொல்லும் இலக்கை நோக்கியே நான்!

- ஆசைகள் (சமயத்தில் ஆகின்றன பேராசைகளாய்!)

என்னை உயரத்தில் வைத்து
அழகு பார்ப்பவள் நீ !
உனக்கு எட்டாகனியாய்
இருந்துடுவேனோ என்று நினைத்து,
உன் பிடிமானத்தை
என் மேல் இறுக்கி
என்னை காற்றின் திசைக்கு ஏற்ப
ஆடவிடாமல் செய்வது நியாய‌மா?

- பட்டம்

கவலைகளை போக்கும்
அரும்மருந்தாய் நினைத்தாய்
இறுக்கமான சூழலில்
விடுவிப்பதாய் கூறினாய்
சந்தோசத் தருணத்தில்
கிளர்ச்சியூட்டுவது என்றாய்
பொழுதுபோகா நேரத்தில்
தோழமை என்றாய்
பின் ஏன்
உன்னுடன் என்னையும் சேர்த்து
துயரத்தில் ஆழ்த்தி சென்றது !

- புகைத்தல்

நானே
கேள்விகளை கேட்டுக்கொண்டு
அதற்கு,
நானே
பதிலும் அளித்துக்கொண்டு
யோசிக்க முயற்சிக்கிறேன்.

சில நேரங்களில்
தெளிவு பிறப்பதுண்டு
ப‌ல நேரங்களில்
குழம்பியதுண்டு
ஆனால்,
கேள்விகள் மட்டும்
முடிவதாக இல்லை!

- கேள்விகள்

என் சந்தோசங்கள், துயரங்கள்
என் வெற்றி,தோல்வி என
என்னுளே பொதிந்து,பொதிந்து
எனக்கே உரமாய் மாறி,
ஊக்குவித்து
என்னை  மீண்டும் மீண்டும்
எழ செய்து அழகு பார்ப்பதற்கு
உன் ஒருவனாலே முடியும்
எந்த பிரதிபலன் இல்லாமல்!

 -  என் அனுபவம் 

Saturday, July 27, 2013

சாரல்கள் - 2


என் முயற்சி
என் வலிமையால்
மட்டுமே என்னால்
மேலே மேலே செல்ல முடியும்
என ஊக்குவித்தவன் நீ!
வாழ்வின் ஏற்ற தாழ்விற்கும்
என்னை பழக்கியவன் நீ!

- ஊஞ்சல்


என் வாழ்வு
உன்னோடு இன்று ஒரு நாள் தான்
தெரிந்தும்
உன்னை அழகாகவே வைத்திருக்கிறேன்
மறந்தும் கண்ணீர் விட்டு
சீக்கிரம் முடித்து விடாதே
என் வாழ்வை!

- கண் மை


என் வலிகள் கேட்க
எந்த காதுகளுக்கும் நேரம் இல்லை
உன் வலிகளை கேட்பதற்காகவாவது
என் காதுகள் இருக்கட்டுமே!

- என் காதுகள்


எப்பொழுது தான் அடங்கும்
உன் பசி
இந்த தீரா பசியை
நாங்கள் போக்குவதற்குள்
இன்னும்
எத்தனை எத்தனை
உயிர்களை தின்பாய்........:(((

- சாதி வெறி


நீ பார்த்து பேசாமல்,
உன் மூலம் பார்த்து பேசும்
பல உள்ளங்களின்
சந்தோசத்தை கண்டு
ஏக்க பெருமூச்சி விட்டு,
துயரங்களை கண்டு
மனம் கனத்து,
அவ்வப்பொழுது,
தொடர்பினை துண்டித்து விடுகிறாயோ!

- SKYPE


கடன் வாங்கி,
நகை வாங்கும்
கோமாளித்தனம்!

- அட்சய திருதியை


உன்
எல்லா பிரச்சனைகளுக்கும்
காரணம் நானே என்றாய்!

உன் மனதின்
தவறான புரிதல்களும்,
தவறான எண்ணங்களும்
இனைந்து ஈன்ற பிள்ளை நான்.

எனை ஈன்ற பிழை மனம்
எப்படி இன்பமாய் இருந்திட முடியும்!

உண்மையாய் உன்னை நேசித்தவர்களிடம்
என்னால் நீ விலகி நிற்கிறாய்!

உந்தன் உள்மனம் திருந்தும் வரை
நான் உன்னை விட்டுப் போகமாட்டேன் !!

- அதீத அன்பு (Possessiveness)


ஏன் திணிக்கிறாய் என்னுள்,
என் அளவிற்கு மேல்!
நான் என்ன‌ உன் மனமா?
எல்லாவற்றையும், ஏற்று கொண்டு
நீ விரும்பும் நேரத்தில்,
தேடி எடுத்து தர!

- என் கைப்பை


உன்னால்,
மொத்த உலகமும்
என் கையில் என்றேன்!
நகைத்துவிட்டு சொன்னாய்,
என் கையில் அடிமையாக தான் நீ!!!!

- செல்பேசி


சிறகை ஒடித்து கூண்டில் அடைக்கப்பட்ட நான்
என் ஒவ்வொரு நாள் அனுபவத்திலும்
கூண்டை உடைக்க கற்று கொண்டேன்!
இறுதியில், ஒரு நாள்
சிறகுகளும் விரிந்தது
கூண்டையும் உடைத்து விட்டேன்!
பறக்க எத்தனிக்கிறேன் முடியவில்லை
என் மீள், மீள் முயற்சியில் பறந்தேவிட்டேன்!
விட்டில் பூச்சியாய் இல்லை,
பீனிக்ஸ் பறவையாய்!!!!

- விடாமுயற்சி

Friday, July 19, 2013

சாரல்கள் - 1


உன்னிடம் கொட்டி செல்லும்
அனைத்தையும்
எப்படி நீ மட்டும்
அழகாக
உள்வாங்கி கொள்கிறாய்!

- மெரீனா


எவ்வளவு தூரம் தான் உன்னால்
என்னை விட்டு ஓட முடியும்!
ஓடு.
உன்னால் முடிந்த வரை ஓடு!
ஆனால்,
எங்கு ஓடினாலும், மீண்டும்
என்னுடன் தான்
நீ இணைந்தே ஆக வேண்டும்!!!

- கடிகாரத்தின் பெரிய முள், சின்ன முள்


எத்தனை வேகமாக சென்றாலும்
எத்தனை,
எத்தனை அழகான நினைவலைகளை
உன்னுடன் சுமந்து கொண்டு ஓடுகிறாய்!

- ரயில்


எவ்வளவு தான் எல்லோரிடமும்
நீ முறுக்கி கொண்டாலும்,
என்னிடம் மட்டும்
உன் பாசாங்கு பலிக்காமல்
சரண் அடைந்து விடுகிறாயே!!!!

- இஸ்திரி பெட்டி


உன்னால் தான்
எல்லா இன்னல்களையும்,
மனஉளைச்சலையும்
அசாதாரணமாய் கடந்து விடுகிறேன் நான்....

- புரிதல்


கண் அயரும் நேரத்திலாவது,
என்னருகே வராதே என்று
உன்னை நான் துரத்தினாலும்
நீ இல்லை என்றால் என்ன, என்று
என் மொத்த படுக்கையையும்
நீயே
ஆக்கிரமித்து கொள்கிறாய்!

- புத்தகங்கள்


என் உறவுகளை எல்லாம்
மென்மையாக தீண்டும் நீ!
ஏன்,
என்னை மட்டும்
இவ்வளவு ஆக்ரோசமாய் தாக்குகிறாய்!
நீ கட்டளை
இடுவதை எல்லாம்
செய்து முடிப்பதனாலா!!!!

- Enter Key


என் எல்லா செயல்களுக்கும்,
நீ விரும்பியோ,
விரும்பாமலோ
உன்னையே சாட்சியாக்குகிறேன் நான்.... !!!!

- கையெழுத்து


அணைக்கும் பொழுது,
என்னை
லாவகமாகவே அணைக்கிறாய்!
உன்னருகே கொண்டு வரும்போதும்,
என்னை
மென்மையாகவே தீண்டுகிறாய்!
திடீர் என்று ஏன்,
என்னை
இப்படி கசக்கி எறிகிறாய்!
ஓ!
என் தேவை தீர்ந்துவிட்டதோ ????

- பேப்பர் கப்


என் மீது
எறியப்படும் கற்களை கொண்டு
படிக்கட்டுகள் அமைத்து
முன்னேறி கொண்டே இருப்பேன் ஒவ்வொருநாளும்....

- விமர்சனங்கள்

Tuesday, November 6, 2012

கனடா எனது பார்வையில்!


என் நீண்ட பயணத்தின் முடிவில் நான் வந்து சேர்ந்த இடம் கனடா. மிகவும் அழகான நாடு. கனடா ஒரு பல கலாச்சார நாடு. கனடாவின் பூர்விக குடியினர் என்று இருப்பவர்கள் இங்கு  மிக மிக குறைவு. பல நாட்டு பல இனத்து மக்களையும் நீங்கள் இங்கு காணலாம். இங்கு இருக்கும் சாலைகள் மற்றும் பாலங்களை பார்க்கும் பொழுது எப்படி இவர்கள் பலவருடங்களுக்கு முன்பே இவ்வாறு யோசித்து கட்டினார்கள் என்றே தோன்றுகிறது . நம் நாட்டிலோ சற்று தலை கீழ் தான். இப்பொழுது அதை பற்றி இங்கு வேண்டாம். கனடா மிகவும் நேர்த்தியாக மக்கள் நலத்திட்டங்களையும், விதிமுறைகளையும் பின்பற்றும் நாடு. பார்த்தவுடன் பிடித்துபோகும் நாடு தான் கனடா. இந்த பதிவு எனக்கு ஏற்பட்ட ஒரு அனுபவ தொகுப்பே.

வீட்டை ஒழுங்கு படுத்துவதிலும், தேவையான பொருட்கள் வாங்குவதிலும் முதல் சில நாட்கள் ஓடி போய் விட்டது. ஒரு விஷயம் இங்கு சொல்லியே ஆக வேண்டும், பெரும்பாலான ஆண்கள் சொந்த ஊரில் எப்படியோ தெரியவில்லை ஆனால் அயல் நாட்டிற்கு வந்தபிறகு அவர்கள் இல்லத்தரசிகளுக்கு  உதவி செய்வதில் எள்ளளவும் தயங்குவதில்லை. இதை  நான் என் குடும்பத்தை மட்டும் வைத்து சொல்லவில்லை. என்னை சுற்றி இருக்கும் என் தோழிகளின் குடும்பங்களை வைத்தும் தான் சொல்கிறேன். அதற்காவே ஆண்களுக்கு ஒரு சல்யுட்.

அயல் நாடுகளுக்கு வந்த பிறகு இங்கு இருக்கும் சில விசயங்கள் நமக்கு வினோதமாகவே இருக்கும். அவற்றை கற்று கொண்டு பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கற்றுகொள்ளும் பொழுது ஏற்படும் அனுபங்களை சொல்லவேண்டும் என்றால் எழுதி கொண்டே போகலாம். எனக்கு ஏற்பட்ட ஒரு சில அனுபவங்களை மட்டும் இங்கு பதிகிறேன். இங்கு வந்து பத்து நாட்கள் ஆன பிறகு மதியம் நானும் என் பையனும் மட்டும் வீட்டில் இருந்தோம். திடீர் என்று பயர் அலாரம் அடிக்க தொடங்கியது. எனக்கு என்ன செய்வது என்று தெரியாமல் கணவரை செல்பேசியில் அழைத்தேன். நாம் தேவைக்கு அழைக்கும் பொழுது தானே நம் வீட்டில் உள்ளவர்கள் மீட்டிங்கில் இருப்பார்கள். போன் எடுக்கவில்லை. கதவை திறந்தால் என்னை தவிர யாருமே வெளியில் இல்லை. எனக்கும் என்ன செய்வது என்று கொஞ்ச நேரம் புரியவில்லை.

நம்மூரில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் பொழுது சொல்லி கொடுத்தது எல்லாம் ஞாபகத்திற்கு வந்தது. லிப்ட் பயன்படுத்த கூடாது, உடனே வெளியில் செல்ல வேண்டும் என்று எல்லாம் மனதில் வந்தது. ஆனாலும் ஒரு சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது, ஏன் நம்மை தவிர யாருமே வெளியில் வரவில்லை என்று. ஒரு வழியாக என் பையனையும் தூக்கிக் கொண்டு பல மாடி படிகள் இறங்கி வந்து கீழே பார்த்தால் கொஞ்சம் நபர்கள் நின்று கொண்டிருந்தார்கள். அப்பாடா, நல்ல வேலை இங்காவது ஆட்கள் இருக்கிறார்களே என்று ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டேன். பின்பு தான் தெரிந்தது பயர் அலாரம் அடித்ததால் லிப்ட் வேலை செய்யவில்லை. அதனால் தான் அவர்கள் எல்லோரும் நின்று கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். அதற்கு பிறகு தான் என் கணவரின் அழைப்பு வந்தது. நான் நடந்ததை சொன்னால் அந்த பக்கம் ஒரே சிரிப்பு. எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

பின்பு தான் தெரிந்தது இங்கு இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. ஒரு வீட்டில் இருந்து சமைக்கும் பொழுதோ இல்லை எதில் இருந்தோ புகை வந்தாலும் ஸ்மோக் அலாரம் அடிக்கும். அதை குறிப்பிட்ட நேரத்தில் கட்டுப்படுத்தாவிட்டால் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் செல்லும். அங்கு தகவல் சென்ற உடனே அபார்ட்மென்டில் உள்ள எல்லா வீடுகளிலும் இதே போல் அலாரம் அடிக்கும். பெரும்பாலும் இதே போல் அடிப்பது எல்லாம் “பால்ஸ்” அலாரம் ஆகவே இருக்கும். இங்கு கட்டப்பட்டுள்ள வீடுகள் எல்லாம் மரத்தினை கொண்டு கட்டுவதால் இது எல்லாம் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்று தெரிந்து கொண்டேன். தீயணைப்பு வீர்கள் சொல்லாமல் யாரும் வீட்டை விட்டு வர வேண்டாம் என்பதையும் சொன்னார் என் கணவர். அவருக்கோ சிரிப்பு, எனக்கோ இத்தனை மாடி பையனை தூக்கி கொண்டு இறங்கி வந்ததை நினைத்தால் கோபம் தான் வந்தது. இது போல பல சம்பவங்கள் நமக்கு அனுபவ பாடமாகவே இருக்கிறது.

எல்லோருக்கும் அயல் நாடுகளுக்கு வந்த பிறகு இங்கு இருக்கும் நவீன சாதனங்களை எல்லாம்  பார்த்து கொஞ்சம் மலைப்பாகவும் ஆச்சரியமாகவும் தான் இருக்கும். அது போல் தான் எனக்கும். உதாரணத்திற்கு துணி துவைப்பது. இங்கு வந்தவுடன் துணி துவைப்பது எல்லாம் எந்திரம் மூலம் என்றவுடன் உண்மையை சொல்லப்போனால் எனக்கு கொஞ்சம் சந்தோசமாகவே இருந்தது. துணி துவைப்பது இலவசம் என்று நினைத்தே சென்றேன். அங்கு போன பிறகு தான் தெரிந்தது அவை எல்லாமே டாலர்கள் என்று. ஒரு “லோடு”  துணிகளை துவைத்து காய வைப்பதற்கு நாம் செலவு செய்ய வேண்டியது 4.1 டாலர்கள். நம் இந்தியா மதிப்பிற்கு கணக்கு பார்க்கும் பொழுது நாமே நம் வீட்டிலே ஏன் துவைக்க கூடாது என்று தோன்றியது. இதில் என்ன கொடுமை என்றால் நாம் வாங்கும்  சோப்பு பவுடர்கள் இங்கு கிடைக்கும் துணிகளை துவைப்பதற்கு என்று தயார் செய்யப்பட்டது. நம் துணிகளுக்கு அது ஒத்து வராது. துணிகள்  எல்லாம் பாழாகிவிடும். அல்லது ஒரு துணியின் நிறம், இன்னொரு துணி மேல் படிந்து பெரும்பாலும் உபயோகம் இல்லாமல் போய்விடும். இவ்வளவு பணம் செலவு செஞ்சிட்டு துணியும் பாழாகணுமா இதற்கு வீட்டிலே துவைக்கலாமே என்றே தோன்றும்.

இன்னொன்று இங்கு இருக்கும் தட்ப வெட்ப நிலைக்கு நம்மால் துணிகளை வீட்டில் துவைத்து காய வைப்பது என்பது நம் ஊரை போல் எளிதில்லை. நம் ஊர்களை போல் அடுக்கு மாடி குடியிருப்புகளில் துணிகளை கயிறு கட்டி காயவும் வைக்க முடியாது. கனடாவில் வெயில் பார்ப்பதும், வெயிலின் தாக்கத்தை உணர்வதும் வருடத்தில் வெறும் மூன்று முதல் நான்கு மாதங்கள் தான். பெரும்பாலும் வெப்பநிலை ஒற்றை இலக்கத்திலும், குளிர்காலத்தில் மைனஸ் பதினைந்துக்கும் கீழே தான் இருக்கும். இதில் துணிகளை எங்கு நாமே துவைத்து காயவைப்பது.

இங்கு நம் நாட்டில் உள்ளது போல் பணிப்பெண் வைத்து கொள்ளும் வழக்கம் இல்லை, ஒரு வேலைக்கு என்று நீங்கள் அடுத்தவரை நாடினால் ஒரு கணிசமான பணம் எடுத்து வைத்தால் மட்டுமே முடியும். எல்லா வேலைகளையும் நாமே தான் செய்ய வேண்டும். இங்கு வந்த பிறகு எனக்கு பெரிதும் கடினமாக இருந்த வேலை இஸ்த்திரி பண்ணுவது. பல காலங்களாய் வெளியில் இஸ்த்திரி செய்து பழக்கப்பட்ட எனக்கு அந்த வேலை செய்வது மிகவும் சிரமமாய் இருந்தது. குழந்தை வைத்து கொண்டு இந்த மாதிரியான வேலைகளை தனியாக செய்வதும் இங்கு கொஞ்சம் சிரமமே. ஏதேனும் அசம்பாவிதம் நடந்து நாம் மருத்துவனைக்கு அழைத்து சென்று, அவர்கள்  கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதில் அளிப்பதில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால்,  நம் குழந்தைகளை  அரசாங்கமே தங்கள் பாதுகாப்பில் எடுத்துகொள்ளும். அவர்களுக்கு நம் மேல் நம்பிக்கை வரும்வரை குழந்தைகளை தரமாட்டார்கள்.

குழந்தைகள் பாதுகாப்பில் அரசாங்கம் பெரிதும் கவனம் செலுத்துகிறது. நீங்கள் கேட்கலாம் அப்போ குழந்தை பராமரிப்பில் பல தவறுகள் நடக்கிறதே என்று. உண்மை தான். அது பெரும்பாலும் அரசாங்கம் அங்கீகாரம் இல்லாமல் நடத்தும் இடத்தில் தான் பெரும்பாலும் நடக்கிறது. பள்ளியிலே குழந்தைகளுக்கு பாதுக்காப்பாக இருப்பது பற்றி சொல்லித்தரப்படுகிறது. அவசர தேவைக்கு 911 எண்ணை அழைக்கும்படி சொல்லித்தருவார்கள். குழந்தைகள் 911 எண்ணை அழைத்தால் உடனடியாக உதவிக்கு வருவார்கள். இது ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையே.

வேலை வாய்ப்பை பொருத்த வரை இங்கு எப்போது வேலை இருக்கும் எப்போது வேலை இருக்காது என்று சொல்ல முடியாது. பணிநீங்கம் இங்கு சர்வ சாதாரணமாக நடக்கும். ணிநீக்கம் செய்யப்பட்டால் அரசாங்கமே சில வாரங்களுக்கு  ஊக்க தொகையாக அவர்கள் முன்னால் வாங்கிய சம்பளத்தின் நான்கில் ஒரு பங்கு தரும். அந்த காலகட்டத்திற்குள் அவர்கள் வேறு வேலை தேடிக்கொள்ளவேண்டும். அதனால் இங்கு யாரும் இந்த வேலைக்கு தான் செல்வேன் அதற்கு செல்லமாட்டேன்  என்று சொல்ல முடியாது. எந்த துறை சேர்ந்தவர்களும் எந்த வேலைக்கும் செல்ல தயாராக இருக்க வேண்டும். மருத்துவம் படித்தவர்கள் கூட டாக்ஸி ஓட்டுனராக பணி செய்வார்கள்.

இங்கு வருவதற்கு முன்பு வரை பனி எல்லாம் நான் சினிமாவில் பார்த்ததுதான். முதல் முதலில் பனி பெய்வதை பார்க்கும் பொழுது மிகவும் சந்தோசமாகவும் அழகாகவும் இருந்தது. ஒவ்வொரு பனி துகளிலும் இருக்கும் அந்த அழகிய வடிவத்தை ரசித்து ரசித்து பார்த்தேன். பனி பெய்து முடித்தவுடன் ஊரே பார்க்க மிக அழகாக இருக்கும். மொத்த ஊரும் வெண் போர்வை போர்த்தியது போல் இருக்கும். ஆனால் எல்லாம் சில நாட்கள் தான். பனி காலம் தான் இருக்கிறதிலே மிகவும் கொடுமையான நாட்கள். எல்லோரும் வீட்டிலே பலநாட்கள் அடைந்து கிடக்கும் தருணமும் அது தான். எப்படி அளவுக்கு மிஞ்சினால் நஞ்சோ அது போல் தான் பனி காலம் இங்கு. பனி காலத்தில் பகல் பொழுதின் நேரம் மிகவும் குறைவு. பனிகாலத்தில் வெளிச்சம் என்பது மிக குறைவு. வீட்டிலும் எப்பொழுதும் மின் விளக்கு இல்லாமல் இருக்க முடியாது.

“டிபெண்டண்டாக” கணவனை சார்ந்து வரும் பெண்கள் பெரிதும் பாதிப்பு அடைவது இந்த காலத்தில் தான். தனிமை அவர்களை பெரிதும் பாதிக்கும். மேலை நாடுகளில் பிறந்து வளர்ந்து வருபவர்களுக்கே  குளிர் காலத்தில் ஏற்படும் இந்த தனிமை மன அழுத்ததை கொண்டு வரும். அவர்களுக்கு இதை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்று கவுன்சலிங் கூட நடக்கும். அவர்களுக்கே இந்த கவுன்சலிங் தேவை என்றால் நம்மை போன்றவர்களுக்கு குளிர் காலம் எவ்வளவு சிரமம் என்று பார்த்து கொள்ளுங்கள்.

நான் கல்லூரி முடிக்கும் வரை எனக்கு பாகிஸ்தான் என்றால் என் எதிரி நாடு என்று தான் நினைத்து இருந்தேன். பின்பு அந்த எண்ணத்தில் மாற்றம் வந்தது என்னவோ உண்மை தான், ஆனால் ஒரு பாகிஸ்தானியரிடமும் நான் பழகியது இல்லை. கனடா வந்த பிறகு எனக்கு அவர்களிடம் பழகும் வாய்ப்பும் கிடைத்தது. என்ன அழகான மக்கள் அவர்கள். இவர்களை எப்படி நாம் எதிரியாக பார்த்தோம்? நான் பல நாட்கள் என்னை நானே திட்டிய நாட்களும் உண்டு. மிகவும் தோழமையுடன் பழகும் குணம் கொண்டவர்கள் அவர்கள். என் மகனை பள்ளிக்கு கூட்டி செல்பவர் ஒரு பாகிஸ்தானிய பெண்மணி. என் மகனை தன் மகனாக பார்க்கும் குணம் உள்ளவர். குழந்தைகளிடம் மட்டும் இல்லாமல் அந்த குடும்பத்தையும் தன் குடும்பமாக பார்க்கும் எண்ணம் உள்ளவர். அவர் மட்டும் இல்லை என் எதிர் வீட்டு தோழியும் பாகிஸ்தானை சேர்ந்தவர் தான். இவ்வளவு அன்பான மக்களை, மிகவும் பவர்புல் மீடியா ஆன சினிமா, டிவி மற்றும் அரசியல்வாதிகள் எப்படி நம்மை எதிரிபோல் பார்க்க வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கும் பொழுது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கிறது.

கனடா வந்த பிறகு எனக்கு சில வருத்தங்களும் உண்டு. அதுவும் நம் இந்திய தமிழர்களிடம் தான். அயல் நாட்டில் நம் மக்களை பார்க்கும் பொழுது நம்மை மீறிய ஒரு சந்தோசத்தில் அவர்களிடம் பேசுவதற்கு ஆவலாய் ஓடுவோம். ஆனால் அவர்கள் நம்மை பார்த்ததும், பார்க்காமல் போவதை பார்க்கும் பொழுதும், நாம் ஏதேனும் பேச முயலும் பொழுது அவர்கள் பதில் சொல்லாமல் நம்மை புறக்கணித்து செல்வதை பார்க்கும் பொழுது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கும். ஏன் நம் மக்களே நம்மை புறக்கணித்து செல்கிறார்கள் என்று தோன்றும். எங்கே நம்மிடம் உதவி கேட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் நம்மை பார்க்காமல் புறக்கணித்து ஓடுகிறார்கள் நம் தமிழர்கள். ஒரே நிறுவனத்தில் வேலை செல்லும் நபர்கள் மட்டும் தான் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவி செய்து கொள்வது உண்டு. அங்கு குடியுரிமை மற்றும் நிரந்தர குடியிருப்பு வாங்கி இருக்கும் நம் இந்திய தமிழர்கள் தான் நம் மக்களை பார்த்த‌‌தும் தலை தெறிக்க ஓடுவதும் எந்த ஒரு உதவியும் செய்து கொடுக்க முன்வராதவர்கள்.

ஒருத்தர் தாய் மொழி மறப்பது என்பது தன் தாயை மறப்பது போல் தான். நான் கனடாவில் பார்த்து அதிர்ந்த மற்றொரு விசயம் நம் இந்திய தமிழர்கள் நம் தாய் மொழியை மறந்து போனது தான். ஆங்கில மோகம் இன்னும் நம் இந்திய தமிழர்களுக்கு குறையவில்லை என்பது நிதர்சனமான உண்மை. அது ஏன் என்று தெரியவில்லை தாய் மொழியை மறப்பது என்பது நம் இந்திய தமிழர்கள் மட்டுமே . ஒரு வட இந்திய குடும்பத்தை பார்த்தீர்கள் என்றால் நிச்சயம் அவர்கள் தாய் மொழியான பஞ்சாபியோ, குஜராத்தியோ. ஹிந்தியோ தான் பேசுகிறார்கள். ஆனால் நம் இந்திய தமிழர்கள் தான் தங்கள் குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். இதை நானே பல முறை இங்கு பார்த்திருக்கிறேன்.

ஒரு வட இந்திய குடும்பம் தங்கள் குழந்தைகளிடம் அவர்களின் தாய் மொழியில் தான் உரையாடுகிறார்கள். குழந்தைகளும் அவர்களின் தாய் மொழியில் தான் தங்கள் பெற்றோர்களிடம் உரையாடுகிறார்கள். இதுவே ஒரு இந்திய தமிழ் குடும்பம் என்றால் தங்கள் குழந்தையிடம் ஆங்கிலத்தில் தான் உரையாடுகிறார்கள். பின்பு எப்படி குழந்தைகள் தாய் மொழியில் பேசுவார்கள். இதை கண்டிப்பாக நம்மவர்கள் கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்கும். நம் பிள்ளைகளும் தாய் மொழியை மறக்காமல் பேசுவார்கள். இதுவே இலங்கை தமிழர்கள் என்றால் அவர்கள் நிச்சயம் தமிழில் தான் உரையாடுவார்கள். அவர்களின் தமிழ் உரையாடல் கேட்க ரொம்ப இனிமையாக இருக்கும். இலங்கை தமிழர்கள் நம் பேச்சை கேட்பதற்கும் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். பெரும்பாலான நம் குழந்தைகளுக்கு தமிழ் எழுத்துக்கள் கூட தெரியாமல் தான் இருக்கிறார்கள் என்பது மிகவும் வருந்தபடவேண்டிய விசயம்.

இந்த சின்ன சின்ன நெருடல்களை தவிர்த்து பார்த்தால் கனடா மிக அழகான நாடு. எல்லோருக்கும் பிடிக்கும். இருப்பினும், பண்டிகை காலங்கள், குடும்ப விழாக்கள் போன்றவற்றை உறவுமுறைகளுடன், நட்புறவுகள் ஆகியோருடன் சேர்ந்து பகிர்தலை இழக்கிறோம். அவர்களது இன்ப துன்ப நிகழ்வுகளில் பங்கெடுக்க முடிவதில்லை. சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருவதில்லையே!